மலேசியாவில் வாழக்கூடிய தமிழர்களின் நிலை என்னவாக இருக்கிறது என்பதை முழுமையாக புரிந்து கொள்வதற்கு இந்த சிறுகதைகள் நிச்சயமாக உதவும். அதோடு இந்த தொகுப்பை படிக்கும்போது நல்ல சிறுகதைகளைப் படித்த உணர்வு ஏற்படும். – இமையம்
பல கட்டுரைகளில் நவீனின் நோக்கு என் நோக்குக்கு மிக அருகே வருகிறது. ஏனென்றால் அது புதுமைப்பித்தன், க.நா.சு, சுந்தரராமசாமி எனத் தொடர்ந்து வரும் ஒரு நவீன இலக்கியப் பார்வைதான். அது பொது உண்மைகளைத் தவிர்த்து இலக்கியம் மட்டுமே முன்வைக்கும் தனியுண்மைகளைக் கவனிக்கும். கொள்கைகளையும் கோட்பாடுகளையும் கடந்து மானுட விசித்திரங்களையும் மானுட உன்னதங்களையும் நோக்கும். காட்டில் யானை செல்லும் பாதை உண்டு. எலிகள் செல்லும் பாதை கீழே. பறவைகள் செல்லும் பாதை மேலே. எங்கும் செல்லும் பாதை என்பது காற்றின் வழி. அதுவே இலக்கியத்திற்குரியது. உயிர்ப்புள்ள ஓர் இலக்கிய ரசிகன் தனக்குள் இருப்பதை இக்கட்டுரைகள் வழியாக நவீன் காட்டுகிறார். தான் எனக் கோத்துக்கொண்டிருக்கும் தன்முனைப்பை அகற்றித் தான் என உணரும் தானறியாத் தன்னிலை ஒன்றைப் புனைவுகள் முன் வைக்கவும் புனைவுக்குள் கரைந்து உட்செல்லவும் மீண்ட பின் தான் கண்டவற்றைத் தன் மொழியில் தன் அனுபவமாக முன்வைக்கவும் அவரால் முடிந்துள்ளது.
மலேசியாவில் கோலோச்சியிருக்க வேண்டிய மனிதன் தன் தாயகம் திரும்ப நேர்வதில் முடிகிறது நாவல். சொந்த வாழ்வில் நிம்மதியற்ற சூழலை அவரே ஏற்படுத்திக் கொள்கிறார். அவரது பொருளாதாரம் வீழ்த்துகிறது. சண்முகம்பிள்ளை கண்டடைவது வாழ்க்கை என்பது ஒரு சூதாட்டம். அதில் அவர் தோல்வியைச் சந்திக்கிறார். இந்த அனுபவத்தை ‘அக்கினி வளையங்கள்’ நாவல் தருகிறது. சை.பீர்முகமது இந்நாவலை எழுதியதின் வழி நிலையான இடத்தைப் பெறுகிறார். சு.வேணுகோபால்
மலேசியாவின் இருண்ட பகுதிகளைப் புனைவாக்கியவர் மஹாத்மன். அவரது விவரிப்பில் ஒரு வாசகன் காண்பது அதுவரை நம் கண்களுக்கு எளிதில் அகப்படாத மனிதர்களும் வெளியும்தான்.
கே.பாலமுருகனின் தேர்ந்தெடுத்த இக்கதைகள் அந்நியமாதல் சிக்கலை வலுவாகப் பேசும் புனைவுகள். தோட்டத்தில் இருந்து பெயர்ந்த உதிரி மனிதர்களின் வாழ்வை இக்கதைகள் பேசுகின்றன.