Showing all 5 results

  • ஹரிலால்

    “மூன்று முக்கியத்தரப்புகள் நாவலில் உள்ளன. ஒன்று காந்தியடிகளின் தரப்பு. பொதுவாழ்வில் தனிவாழ்வின் சிறப்பைக் கண்டுணரும் பார்வையைக் கொண்ட காந்தியடிகள் தன் மகனை பொதுவாழ்வை நோக்கிச் செலுத்த விழைந்து, அம்முயற்சியில் தோல்வியடைகிறார். இன்னொன்று கஸ்தூர் பா தரப்பு. மகனுடைய வெற்றியையும் வளர்ச்சியையும் உள்ளூர விழைபவராகவும் அதற்காக கணவரிடம் உரையாடுபவராகவும் காணப்படுகிறார். தன் முயற்சிகளில் அவருக்கும் தோல்வியே கிடைக்கிறது. ஹரிலால் மூன்றாவது தரப்பு. இளைய காந்தி என பட்டப்பெயர் சூட்டி மற்றவர்கள் அழைக்கும்போது உள்ளூர மகிழ்ச்சி அடையும் அவர் மீண்டும் மீண்டும் சிறைக்குச் செல்வதன் வழியாக எதைச் சாதிக்கப் போகிறோம் என்ற கேள்விக்கு அவரால் சரியான விடையைக் கண்டுபிடிக்க முடியாதவராக தடுமாறுகிறார். தன் தந்தை வகுத்தளிக்கும் வழியின் மீது அவநம்பிக்கையுற்று தனக்கு முன்னேற்றமளிக்கும் வேறொரு வழியை நாடி குடும்பத்துடன் முரண்கொள்கிறார் ஹரிலால். சில ஆண்டுகளுக்கு முன்பாக சி.சு.செல்லப்பா சுதந்திரப் போராட்ட காலத்தைப் பின்னணியாகக் கொண்டு ‘சுதந்திர தாகம்’ என்ற நாவலை எழுதினார். அதில் காந்தியடிகளைப்பற்றிய பல தகவல்களை, பாத்திரங்களுடைய உரையாடல்களின் வழியாக அறிந்துகொள்ளலாம். இப்போது, காந்தியடிகளையே ஒரு முக்கியமான கதைப்பாத்திரமாகக் கொண்டு இந்த நாவல் எழுதப்பட்டுள்ளது. சிறப்பான தமிழ் நாவல் வரிசையில் கலைச்செல்வியின் இந்நாவலுக்கும் இடமுண்டு.”

    RM30.00
  • தன்மீட்சி

    இன்றைய தலைமுறையில் மிகச்சிறுபான்மையினராயினும் ஏராளமானவர்கள் தனக்கென தனிவாழ்க்கையை கோருகின்றனர். தனி அடையாளத்தை விழைகின்றனர். அவர்களே இந்த வினாக்களுக்குள் வந்து விழுகிறார்கள். அடுத்த தலைமுறையில் இக்குழப்பங்களுக்கு இடமிருக்காது, சமூகத்திலேயே இதற்கான பொதுவிடைகள் உருவாகியிருக்கும், ஐரோப்பிய அமெரிக்க சமூகங்களில் இருப்பதைப்போல. சமூகம் இத்தனை அழுத்தத்தை தனிமனிதனுக்கு அளிக்காது.

    திரும்பத்திரும்ப என்னிடம் இந்த வகையான வினாக்கள் கேட்கப்படுகின்றன. இத்தகைய வினாக்கள் இன்றைய தலைமுறையினரிடம் வலுவாக எழுந்துகொண்டிருக்கின்றன என நினைக்கிறேன். சென்ற தலைமுறையில் இத்தகைய வினாக்கள் இல்லை. அன்று ஒவ்வொருவரும் சமூகத்தின் பொது அடையாளத்தை தன் அடையாளமென்று கொண்டனர். வேலை, குடும்பம், தனிச்சொத்து, தொழில்வெற்றி, ஓய்வுவாழ்க்கை, இறப்பு என பிறர்போற்றும் வாழ்க்கையே தன் வாழ்க்கை என்று எண்ணி எளிதில் அமைந்தனர். அதுவே நம் மரபு நமக்களிக்கும் வாழ்க்கைப்பாதை. அதை ஏற்றுக்கொண்டால் சிக்கல்களே இல்லை.

    இவ்வகையான கடிதங்களுக்குச் சென்ற இருபதாண்டுகளாகப் பதில் போட்டுக்கொண்டிருக்கிறேன். ஏனென்றால் இது நம் சமகாலத்தில் உள்ள பொதுப்பிரச்சினை. அனைவருக்கும் உரியது. இதற்கு தனிப்பட்ட ஆலோசனைகள், வழிகாட்டல்கள் உண்மையில் உதவாது. ஏனென்றால் ஒவ்வொருவரும் தனிப்பட்ட ரசனை, தேடல், அறிவுத்திறன், வாழ்க்கைச்சூழல் சார்ந்து தானாகவே தேடிக் கண்டடையவேண்டியது இது. ஆகவே இப்பிரச்சினையின் பொதுவான தளங்கள் என்னென்ன என்று மட்டுமே சொல்லமுடியும். இரு கோணங்களில். ஒன்று, இது ஒன்றும் இருபத்தொன்றாம் நூற்றாண்டு மனிதனுக்கே உரிய தனிப்பிரச்சினை அல்ல. என்றுமுள்ள மானுடப்பிரச்சினை. ஆகவே இதை மரபு எப்படி அணுகுகிறது என்று. இரண்டு, இன்றைய சூழலில் இது பொதுவாக எப்படிப் பொருள்படுகிறது என்று.

    திரும்பிப்பார்க்கையில் நாம் நமக்களிக்கப்பட்ட நாட்களை நம்முடைய அகம் நிறைவுகொள்ளும்படி செலவிட்டிருந்தால், அந்த வாழ்க்கை முழுமையானதுதான்.

    தன்னறத்துக்கும் சூழலுடன் ஒத்துப்போவதற்கும் நடுவே ஒரு துலாமுள் போலவே நாம் செல்லவேண்டியிருக்கிறது.

    RM18.00RM20.00
  • யதி : தத்துவத்தில் கனிதல்

    யதி : தத்துவத்தில் கனிதல் “நான் இமய முகடுகளில் பலமுறை ஏறிச்சென்றதுண்டு. அங்கு மிக உயரத்தில் பனி பாறை போல உறைந்திருக்கும். அதைத் தொட்டால் பனி மெல்ல உருகி பள்ளம் ஏற்படுகிறது. அதன் வழியாக நீர் துளித்துளியாக வழிகிறது. பாறை விரிசலிடுகிறது. உடைந்து சிறு ஓடையாக வழிகிறது. அது பெரிய நீரோடையாகலாம். அப்போது நீர்சுழிக்கும் ஒலி ஏற்படுகிறது. ஓடை சிறு வெள்ளாடு போல தாண்டிக் குதிக்கிறது. அது கங்கையாகலாம். மந்தாகினியாக நடைபோடலாம். ருத்ர பிரயாகைக்கு வரும்போது பெயருக்கு ஏற்ப ரெளத்ர பிரவாகம்தான். காதுகளை உடைக்கும் பேரோசை. பிறகு ரிஷிகேசம். நீர் மலினமடைகிறது. காசியில் அதில் சகல பாவங்களும் கலக்கின்றன. கல்கத்தாவில் கங்கை கடல் போலிருக்கும். மறுகரை தெரியாது. அதன்மீது கப்பல்கள் நகரும். கடலும் கங்கையும் ஒன்றாகுமிடம் எவருக்கும் தெரியாது. ஆயிரம் ஒலிகள் அதன்மீது ஒலிக்கும். ஆனால் கங்கையும் கடலும் பேரமைதியில் மூழ்கியிருப்பதாகப்படும். பனிப்பாறையின் அதே அமைதி. நம் பனிப்பாறையை அனுபவமெனும் விரல் தீண்டும்போதுதான் விழிப்பு ஏற்படுகிறது. தீண்டப்படாத பனிப்பாறைகள் ஒருவேளை யுக யுகங்களாக அங்கேயே, யார் பார்வையும் படாத உயரத்தில், அப்படியே இருந்து கொண்டிருக்கக்கூடும். பெரும் செவ்விலக்கியங்கள் மெளனமானவை. அவை ஒரு மனதின் வெளிப்பாடுகளல்ல, பல்லாயிரம் வருடங்களாக உறைந்து கிடந்த ஒன்று உயிர் பெற்றெழுவது ஆகும். மனம் என்பது ஒரு தனிமனித அமைப்பல்ல. ஒரு பெரும் பொதுமை அது. காலாதீதமானது. தூலங்களில் மட்டும் ஈடுபட்டு ஆழ்ந்த அனுபவங்களை மறந்துபோன ஒரு தலைமுறையினர் நாம். துரியத்தின் தளத்தை நமது படைப்புலகில் நாம் அடைய முடியாது போகலாம்; காரணத்தின் தளத்தை தொடமுடியாது போகலாம்; குறைந்தபட்சம் பிரபஞ்ச சாரத்தின் ஒளி பரவிய கனவின் தளத்தையாவது தொட்டறிய முயல்வோம்.” ~ நித்ய சைதன்ய யதி

    RM55.00
  • தெருக்களே பள்ளிக்கூடம்

    ராகுல் அல்வரிஸ் எழுதி, சுஷில்குமார் அவர்கள் தமிழில் மொழிபெயர்த்துள்ள ‘தெருக்களே பள்ளிக்கூடம்’ என்னும் இப்புத்தகம், குக்கூ காட்டுப்பள்ளியின் தன்னறம் நூல்வெளி வாயிலாக வெளியீடு கொள்வதில் நாங்கள் நிறைமகிழ்வு அடைகிறோம். கனவொன்று நிஜமாதல்போல இது இக்காலத்தில் சாத்தியப்பட்டிருக்கிறது. பள்ளிக்கு வெளியே திறந்துகிடக்கும் கல்விவெளி எவ்வளவு பரந்துவிரிந்தது என்பதை இப்புத்தகம் நிச்சயம் நம் அனைவருக்கும் எடுத்துக்காட்டும். ஓராண்டு பள்ளிக்கல்வியைத் துறந்து, விடுமுறை எடுத்து பயணங்களின் வழியாகவும் களப்பணிகள் வழியாகவும் ராகுல் அல்வரிஸ் கற்றுக்கொண்ட வாழ்வனுபவத்தின் எழுத்துவெளிப்பாடே இப்புத்தகம். இந்திய இயற்கை வேளாண்மைக் கூட்டமைப்பின் (Organic Farming Association of India – OFAI) தலைவராக இருந்தவரும், தேசிய அளவில் சூழலியல் சார்ந்த பெரும் பொறுப்புகளை வகித்த சூழலியலாளருமான ‘கிளாட் அல்வாரிஸ்’ அவர்களின் மகன் ‘ராகுல் அல்வரிஸ்’. பெரும் தொகையளித்து நாம் வளர்க்கிற ‘பள்ளிக்கூடம்’ என்னும் நிறுவனங்களால் வழங்க முடியாத ஒரு வாழ்வுக்கற்றலை, நம்மால் தெருவில் இறங்கிப் பெறமுடியும் என்பதற்கான நேரடிச்சாட்சியாக தன் மகன் ராகுல் மாறுவதற்கான முழுச்சுதந்திரத்தை அளித்தார் கிளாட் அல்வரிஸ். பெற்றோர் வழங்குகிற சுதந்திரமும், பிள்ளைகள் ஏற்கிற பொறுப்புணர்வும் ஒன்றுகுவியும் புள்ளியில் விடுதலைக்கல்வி மலர்கிறது. வெறும் வாழ்வனுபவ பயணக்குறிப்பு எனச் சுருங்கிவிடாமல், மீன், மண்புழு, சிலந்தி, ஆமை, காளான், பாம்பு, முதலை உள்ளிட்ட பல்வேறு உயிர்களைப்பற்றிய ஆவணத்தொகுப்பாகவும் இப்புத்தகம் முக்கியப்படுகிறது. புளியானூர் கிராமத்துக் குழந்தைகளுக்கான மாலைநேரத் திண்ணைப்பள்ளியையும், பொன்மணி முன்னெடுக்கும் பெண்களுக்கான தையல்பள்ளியையும், அர்விந்த் குப்தா அவர்கள் குக்கூ காட்டுப்பள்ளி திறப்புநாளன்றே தனது சேவைக்கரங்களால் திறந்துவைத்தார். அந்த மண்தரையில் அமர்ந்து அவர் பேசிய ஒவ்வொரு சொல்லும் ஒரு குழந்தையின் விடுதலைக்கான கனவுவிதை. அதைத் தொடர்ந்து அவ்வப்போது அந்தக் கிராமத்துக் குழந்தைகள் காடுகள், பறவைகள், வனவுயிர்கள், நீரோடைகள் குறித்துச்சொன்ன எல்லாக் கதைகளும் தகவல்களும் ஒன்றே ஒன்றைத்தான் எங்களுக்குச் சுட்டிக்காட்டின. தெருக்களே மனிதனின் முதற்பள்ளிக்கூடம்! பள்ளிக்கூடங்களின் வகுப்பறைச் சுவர்களுக்குள்ளும் பாடப் புத்தகங்களுக்குள்ளும் கற்க இயலாத இயற்கையறிவை, குழந்தைகள் சுதந்திரமாகவும் எளிமையாகவும் பெற்றடைவது, விரிந்துபரவும் வீதிகளில் இருந்துதான்! ‘விளையாட்டுகளே உயரிய ஆய்வு வடிவங்கள்’ என்ற ஐன்ஸ்டீன் சொன்னதை யோசித்துப்பார்க்கையில், வகுப்பறைகளைவிட ஒரு பள்ளிக்கூடத்திற்கு மைதானம் எவ்வளவு முக்கியம் எனத் தெரியவரும்! அவ்வகையில் பார்த்தால், ஒவ்வொரு குழந்தைக்கும் தெருவே முதற்குரு. எழுத்தாளர் கு.அழகிரிசாமி எழுதிய ஒரு சிறுகதையின் ஒற்றைவரி இக்கணம் மனதில் உதிக்கிறது, “அழுக்கப்படாத படிப்பு படிப்பில சேத்தியா?”

    RM20.00
  • உப்புவேலி

    உப்புவேலி – உலகின் மிகப்பெரிய உயிர்வேலியின் வரலாற்று ஆவணம் 2300 மைல்கள் தொலைவு நீளமுள்ள ஒரு புதர்வேலியை உருவாக்கியது ஆங்கிலேயக் கிழக்கிந்திய கம்பெனி. உப்பின் மீது உயர்வரி விதித்து, உப்புப் பரிமாற்றத்தை தடைசெய்வதற்காகவே, இமயமலையிலிருந்து ஒரிசா வரைக்கும் இந்தியாவையே இரண்டாகப் பிரித்தது அவ்வேலி. மனித வரலாற்றிலேயே மிகப்பெரிய கட்டுமானங்களுள் ஒன்று. சொல்லப்போனால், உலகிலேயே மிகப்பெரிய உயிர்வேலி அது. ஆனால், அந்த வேலியைப்பற்றிய ஒட்டுமொத்த நினைவுகளும் ஒரு நூற்றாண்டுக்குள் முற்றிலுமாக இத்தேச மக்களுக்கு மறந்துபோனது. பழங்ககதைகள் துவங்கி தற்போதைய வரலாற்று நூல்கள்வரை எதிலும் அந்த வேலிபற்றிய சிறுகுறிப்புகூட இடம்பெறவில்லை. பிரிட்டனிலிருந்து கிளம்பிவந்து, ஒரு தேசமே மறந்துவிட்ட சுங்கவேலியின் மிச்சமான சிறுபகுதியைக் கண்டடைந்து ஆவணப்படுத்தினார் வரலாற்று ஆய்வாளர் ராய் மாக்ஸம். சமகால இந்திய வரலாற்றாவணங்களில் தவிர்க்கமுடியாத ஆக்கங்களில் இப்புத்தகமும் இடம்கொள்கிறது. இந்தியாவின் கடைக்கோடி கிராமத்து நிலங்களில் வரைபடங்களோடு அலைந்துதிரிந்து, இறுதிவரை முயிற்சியைக் கைவிடாமல் பயணித்த ஆசிரியர் ராய் மாக்ஸம் அவர்களின் பெருந்தேடல், உலகின் மிகப்பெரிய உயிர்வேலியை நமக்கு ஆவணப்படுத்திக் கொடுத்துள்ளது. தவறவிட்டுவிடக்கூடாத வரலாற்று ஆவணமான ‘உப்புவேலி’ புத்தகம், சிறில் அலெக்ஸ் அவர்களின் தமிழாக்கத்தில், தன்னறம் நூல்வெளி வாயிலாக மீள்பதிப்பாக பதிப்பிக்கப்பட்டு (கெட்டி அட்டையுடன்) வெளிவந்துள்ளது.

    RM40.00